காரிருள் சூழ் கலியுகத்தில்
ஓரொலியாம் தமிழன்னை
அறியாயோ மானிடமே! அவையறியும்
அற்பன் நான்.
கோலாட்சி மன்னனும் ஆவுரிக்கும் புலையனும்
பண்டிதரும் பாமரனும் சிரமுயர்த்தி
சீராட்டும் அமுத மொழியாம் தமிழன்னை
புகழ்பாட என் ஆன்மாவும் சிலிர்த்தாடும்!
காவியமும் பாரதமும் களிப்பூட்டும் நாடகமும்
பொருளுணர்த்த வந்ததென்ன? தமிழர்
புயமுயர்த்தி வைத்ததென்ன? இவையனைத்தும்
அவள் விந்தை அன்றோ?
சேரருஞ் சோழரும் உலகாண்ட பாண்டியரும்
கோலூன்றி நின்றதென்ன? கம்பரும் வள்ளுவனும்
தான் கண்ட தமிழ்ச் சுவையை சுவைத்ததென்ன?
தமிழா உன் நாமம் பிறரறியச் செய்ததென்ன…?
பாரதியின் எழுச்சிக்கும் இளங்கோவின் உணர்ச்சிக்கும்
உந்தியவர் யார் தமிழா? உன் உணர்வையும்
அறிவையும் தூண்டியவர் யார் தமிழா?
உன் உயிரான தமிழ் அன்னை அன்றோ தமிழா…!
தாமதியாதே தமிழினமே! அதுவுன்
தாய்க்குச் செய்யும் துரோகமடா! காரிருள்
தனை களைந்து மார்தட்டி எழுவோமடா
தமிழன்னை மைந்தர்களாய்….!
Image Courtesy :
https://swamiindology.blogspot.com/2018/04/tamil-poet-valluvar-and-western.html