ஆதலால் கவிஞனானேன்…

Share

அவளை அவ்வளவு நேசித்தேன்
அளவிட முடியாதளவு

அவளை அனுதினமும் சுவாசித்தேன்
ஆழ் மூச்சு தொடுமளவு

மலர்களை எறிந்து விட்டு
சாலையோரத்து மரங்களெல்லாம்
விதவையானது

ஏன் தெரியுமா?

வஞ்சி மகள் பிஞ்சுப் பாதங்கள்
மலர்களில் நடக்கவென…

அலைகளை சரித்து விட்டு
வங்கம் தன் கரைகளில்
நுரைகளானது
ஏன் தெரியுமா?

தேவமகள் திருமுகத்தை
நுரைகளில் சிறைப்பிடிக்கவென…

தன் புனிதத்தை மறுத்து விட்டு
கங்கை மங்கையால் பாவத்தின்
தீர்த்தமானது

ஏன் தெரியுமா?

கந்தர்வ மகள் இடை எழுந்து
மென் பந்துகள் தீண்டவென…

கொண்டல் திசை மறந்துவிட்டு
குழல் படிந்து தவழ்ந்து
மூர்ச்சையானது

ஏன் தெரியுமா?

காதல் மகள் முடி விரித்து
காலமெல்லாம் தூங்கவென…

ஏன் கவிஞனானேன்?

அவளை அவ்வளவு நேசித்தேன்
அளவிட முடியாதளவு

அவளை அனுதினமும் சுவாசித்தேன்
ஆழ் மூச்சு தொடுமளவு

அதனாலே கவி நெய்தேன்
அழகு தமிழ் வரி கோர்த்து
ஆதலால் கவிஞனானேன்
ஆயிரம் முறை மீண்டும் பிறந்தேன்

By: Piramilan

Image Courtesy : http://premieum.blogspot.com/2011/03/cute-valentines-day-ideas-for-boyfriend.html

 
Tagged : /